ஈஷா மையத்தில் குழந்தைகள் சித்திரவதை: அதிர்ச்சித் தகவல்கள்

ஈஷா யோகா மையத்தில் அத்துமீறல்கள் நடப்பது உண்மைதான் என அந்நிறுவனத்தில் எட்டு ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி விலகி வந்த நிர்வாகி ஒருவர் பரபரப்பு புகார் தெரிவித்திருந்தார். மதுரை திருப்பாளையம் பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்ற ஓய்வு பெற்ற உளவுத்துறை காவலர் ஞாயிறு அன்று ஈஷா யோகாமையம் குழந்தைகளின் சித்தரவதைக் கூடமாக செயல்படுவதாகவும், அதிலிருந்து தனது மகன்களை மீட்டு வந்து விட்டதாகவும், மற்ற பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் என்கிற நோக்கத்தோடு மதுரையில்  இருந்து தனது பிள்ளைகளையும் அழைத்து வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், அவர் கூறுகையில், தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் ஈஷா யோகா மையம்  குறித்தும், அங்குள்ள சமஸ்கிருத குருகுல பள்ளிகளின் சிறப்புகள் குறித்தும் தொடர்ச்சியாக வந்த செய்திகள்  எனது பிள்ளைகளை அங்கு சேர்க்க வேண்டும் என்கிற எண்ணம் வந்தது. இதனையடுத்து எனது  மூத்த மகனை ஐந்து இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை ஈஷா யோகா மையத்தில் செலுத்தி 2012 ஆம் ஆண்டு சமஸ்கிருத பள்ளியில் சேர்த்தோம். இதனையடுத்து 2014இல் எனது இளைய மகனை ஏழு இலட்ச ரூபாய் செலுத்தி அவனையும் சேர்த்தோம். இந்நிலையில் இரண்டு வருடத்திற்கு பிறகு ஈஷா யோகா மையத்தில் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. இதில் உங்கள் மகனின் நடவடிக்கை சரியில்லை அதிக கோபம் வருகிறது, படிப்பு ஏறவில்லை உடனடியாக மருத்துவரிடம் கூட்டிச் செல்லுங்கள் என்றனர். எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது. இதனையடுத்து கேஎம்சிஎச் மருத்துவ மனைக்கு கூட்டிச்சென்றபோது, குழந்தைகள்  மனநல மருத்துவரிடம் கவுன்சிலிங் தரவேண்டும் என்றனர். ஒரு மாதத்திற்கு பிறகு எனது மகனுக்கு கவுன்சிலிங் கொடுத்த மனநல மருத்துவர் உடனடியாக உங்கள் பிள்ளைகளை ஈஷா மையத்தில் இருந்து கூட்டிச் செல்லுங்கள் என்றார். என்ன காரணம் என மருத்துவரிடம் கேட்டதற்கு ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டார்.

இதனையடுத்து மதுரைக்கு சென்று இருவரையும் வேறு பள்ளியில் சேர்த்துவிட்டேன். சிறிது நாட்கள் கழித்தபின் அவர்களாகவே என்னிடம் ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற சித்தரவதைகள் குறித்து தெரிவித்தனர். இது எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. என்னிடம் இலட்சக்கணக்கில் பணமும் பறித்துக் கொண்டு மகன்களையும் கொடுமைப்படுத்திய செயலை ஏற்கமுடியவில்லை. இதனையடுத்து நான் காவல் துறையில் உளவுப்பிரிவில் பணியாற்றி இருப்பதால் அந்த அனுபவத்தோடு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினேன். இதனையடுத்து ஈஷா யோகா மையத்தினர் என்னிடம் ஒன்பது இலட்சம் ரூபாயை தந்துவிட்டு நடந்த சம்பவங்கள் குறித்து வெளியில் சொல்லக்கூடாது  என கடிதம் பெற்று சமரசத்திற்கு வந்தனர். கடந்த பலமாதங்களாக எனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்திய இந்த சம்பவம் எனது பிள்ளைகள் போல் மற்ற பிள்ளைகளும் பாதிக்கக் கூடாது என பலரிடம் சொல்லி வந்தேன். ஆனால் என்னுடைய பேச்சை யாரும் நம்பவில்லை. தற்போது கடந்த ஒருவாரமாக ஈஷா யோகாமையத்தின் முறை கேடுகள் வெளி வந்து கொண்டிருக்கிற செய்திகள் எனக்கு பெரும் நம்பிக்கை அளித்துள்ளது. ஆகவே, எனது குழந்தைகள் அனுபவித்த வேதனையும் பதிவு செய்ய வேண்டும். வேறு எந்த குழந்தைகளும்  அப்படியான வேதனை அனுபவிக் கக்கூடாது என்கிற நிலையில் இருந்தே மதுரையில் இருந்து சொந்த செலவில் கோவைக்கு வந்துள்ளேன் என்றார். மேலும், குழந்தைகள் எவ்விதமான தண்டனைகள் அனுபவித்தனர் என்பது குறித்து  கேட்டபோது, அதை எனது குழந்தைகளிடமே கேட்டுக் கொள்ளுங்கள் என்றார். அந்த சிறுவர்கள்  கூறுகையில், அங்கு நடைபெறும் சிறுசிறு தப்புகளுக்குகூட சேவா என்கிற தண்டனை வழங்கப்படுகிறது. இதில் தண்டனை பெற்ற பிள்ளைகள், மற்ற  பிள்ளைகள் என இரண்டாக பிரித்து வைக்கப்படுகிறார்கள். தண்டனை பெற்றவர்களுக்கு உப்பில்லாத உணவும், மற்ற பிள்ளைகளுக்கு பலகாரத்தோடு உணவும் பரிமாறப்படுகிறது. மேலும் சேவா தண்டனை பெற்றவர்கள், கழிவரை சுத்தம் செய்ய வைப்பதும், மாட்டுச்சாணி அள்ள வைப்பதும், மையத்தில் உள்ளவர்களின் துணிகளை துவைத்து  தருவதும், வெளிநாட்டவர் தங்கியுள்ள அறைகளை  சுத்தம் செய்ய வைப்பதும், இதுபோக தினந்தோறும், நூறு தோப்புக் கரணத்தில் இருந்து ஐநூறு தோப்புக் கரணம் வரை கட்டாயம் போட வேண்டும் என்பது  போன்ற சித்தரவதைகள் கொடுக்கப்படுகிறது. எனக்கு  மட்டுமல்லாமல் ஆறு வயது குழந்தைகளுக்குக்  கூட  இது போன்ற தண்டனை கொடுக்கப்படுகிறது என அச்சிறுவர்கள் தெரிவித்தனர்.

ஈஷா யோகா மையத்தின் நிர்வாகிகளிடம் நீங்கள்  இதுபோன்ற வேலை செய்திருக்கிறீர்களா? எனக் கேட்டதற்கு ‘மண் சோறு சாப்பிடு’ என நிர்ப்பந்தம்  செய்தனர். இதுகுறித்து வீட்டில் உள்ளவர்களுக்கு  தெரிவிக்கவில்லையா என கேட்டதற்கு, கடிதம் மூலமாக எந்த தகவலும் வீட்டுக்கு அனுப்ப முடியும்,  ஆனால் நாங்கள் இங்கு கொடுக்கப்படும் தண்டனைகள் குறித்த எந்த கடிதமும் பெற்றோர்களுக்கு போய்ச் சேரவில்லை. அனைத்து  கடிதங்களும் தனிக்கை செய்தே அனுப்பப்படுகிறது  என்பதை எங்கள் வீட்டிற்கு சென்றபிறகுதான்  தெரியவந்தது. எங்கள் பெற்றோர்கள் வந்து அழைத்து செல்லவில்லை ஆகவே நாங்கள்தான் தவறு  செய்கிறோமோ என்கிற பயத்திலும், இலட்சக்கணக்கான ரூபாய் பணத்தை கட்டி பெற்றோர்கள் சேர்த்துள்ளனர் அவர்களின் பணம்  வீணாகிவிடக்கூடாது என்கிற அச்சத்திலேயே  அங்கேயே தங்கி இருந்தோம் என்றனர்.

பெரியார் முழக்கம் 11082016 இதழ்

You may also like...