சுற்றுச் சூழல் போராளி பியூஸ் மீதான சிறை தாக்குதலுக்கு கண்டனம்

17-7-2016 ஞாயிறு அன்று காலை 11-00 மணிக்கு, சேலம் குடிமக்கள் குழுவின் சார்பாக, பொய்வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் கடும் சித்திர வதைக்கு உள்ளான பியூஸ் மானுஷ், ஈசன் கார்திக், முத்து செல்வன் ஆகியோரை விடுவிக்கவும், அவர்கள்மீது பொய்யாக புனையப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுமாறும், நீதிமன்றக் காவலில் இருந்த

அவர்களை சிறையில் தாக்கி சித்திரவதை செய்த சிறைத்துறையினர்மீது குற்றவியல் வழக்குப் பதிந்து இடைநீக்கம் செய்ய வலியுறுத்தியும் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சேலம் குடிமக்கள் குழுவின் பொறுப்பாளர் டாக்டர் விஜயன், பிரபல மருத்துவர் கே.என்.ராவ், பசுமை இயக்கம் டாக்டர் ஜீவானந்தம், கோவை டாக்டர் ரமேஷ், தமிழ்நாடு

பழங்குடி மக்கள் சங்கத் தலைவர் வி.பி.குணசேகரன், சென்னை, கோவை, தருமபுரி பகுதி சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பினர், தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைக்குழு உறுப்பினர் ஒசூர் மாரிமுத்து, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சேலம் கிழக்கு மாவட்டத்தலைவர் சக்திவேல், மாவட்ட செயலாளர் டேவிட், மாநகர செயலாளர் பரமேஸ் உள்ளிட்டோர் சுமார் 300 பேர் கூடியிருந்தனர். சிறையில் பியூஷைச் சந்தித்து வந்திருந்த வழக்குரைஞர்  மாயன், பியூஷின் துணைவியார் மோனிகா ஆகியோர் சிறையில் நடந்த கொடுமைகளைக் கூறினர். மோனிகா பேச்சின்

முடிவில், விடுதலை பெற்று வந்ததும் பியூஷ் தொடர்ந்து சுற்றுச்சூழல், மனித உரிமைப் பணிகளைச் செய்வார் என்றும், அதற்கு குடும்பத்தினராகிய நாங்கள் துணை நிற்போம் எனவும் உறுதி கூறியபோது அரங்கமே அதிரும் வண்ணம் கையொலி எழுந்தது. மூத்த வழக்குரைஞர் ப.பா. மோகன் கலந்துகொண்டு பேசும்போது, செவ்வாய்க்கிழமை அவரது பிணை மனு சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது, நீதிமன்றப் புறக்கணிப்பு உள்ள நிலையில் வழக்கறிஞர் சங்கத்திடம் சிறப்பு அனுமதி பெற்று வழக்காடுவேன் என்றார். மாலை 5-00 மணியளவில் அனைவரும் ஊர்வலமாக சென்று, பியூஷின் முயற்சியில் சேலம் மக்கள்குழுவினரால் சீர்ப்படுத்தப்பட்ட மூக்கனேரியில் மரக்கன்றுகள் நட்டனர்.

பெரியார் முழக்கம் 22072016 இதழ்

You may also like...