“250 உதிரி பாகங்களில் ஓடாத வண்டியா, இந்த எலுமிச்சம் பழத்தாலா ஓடப் போவுது?”

  • தெரு ஓரத்தில் மக்களைக் கூட்டி தாயத்து விற்கும் மந்திரவாதிகளின்மோசடிகளைக்கூட நம்பிக் கொண்டிருந்தவர்கள் நாம். இந்த மோசடிகளை அம்பலப்படுத்தி திரைப்படங்களில்கூட காட்சிகள் வைக்கப்பட்டிருந்தன. ஒரு திரைப்படத்தில் நடிகர் மயில்சாமி தாயத்து விற்பார். கூட்டத்தோடு கூட்டமாக தனது ஆளையே நிற்க வைத்து, பிறகு அந்த ஆளையே மந்திரத்தால் மயங்கி விழுந்தவர்போல நடிக்க வைத்து படுக்க வைப்பார். சூழ்ந்து நிற்கும் கூட்டம் பற்றி நன்றாக புரிந்த அந்த ஆசாமியை படுக்கவைத்து உடலையும் முகத்தையும் துணியால் மூடி, மயில்சாமி கூட்டத்தினர் பற்றி கேள்வி  கேட்பார். மயங்கி படுத்திருப்பது போல் நடிக்கும் ஆசாமியிடமிருந்து சட்டென்று பதில்கள் வரும். வேடிக்கைப் பார்ப்பவர்கள் சட்டைப் பையில் உள்ள பணம் முழுவதையும் எடுத்து போடா விட்டால் ‘இரத்தம் கக்கி சாக வேண்டி வரும்’ என்று மந்திரவாதி மிரட்டுவார். கூட்டத்தில் நிற்கும் நடிகர் வடிவேலு பையில் உள்ள பணம் முழுவதையும் போடாமல் 10 ரூபாய் மட்டுமே போட, மயங்கிக் கிடக்கிற மனிதன், அந்த ஆள் பணம் முழுவதையும் போடவில்லை என்று கூறுவான். பணத்தை முழுதும் பயந்துபோய் வடிவேலு போடுவார். கூட்டம் முழுதும், ‘இரத்தம் கக்கி செத்து விடுவோம்’ என்று பயந்து போய்  போட்டப் பணத்தை கேட்காமலே கூட்டம் ஓடி விடும். வடிவேலு போட்ட பணத்தை திருப்பிக் கேட்பார். அவர் முகம் முழுவதும் விபூதியை வீசி கண்களை மறைத்து, படுத்திருந்த ஆசாமியுடன் மந்திரவாதி மயிலுசாமி ஓட்டம் பிடிப்பார். அப்போது வடிவேலு கூறுவார்: “அப்ப மயங்கிப் போய் படுத்திருந்தவனும் அவங்க ஆளுதானா?” – இப்படிப்பட்ட செப்படி வித்தைகளை நம்பிக் கொண்டிருந்த மக்களும் இருந்தார்கள். அறிவியல் ஓரளவுக்கு வளர்ந்த பிறகுதான் இப்படி செப்படி வித்தைக் காட்டும் மோசடிகள் குறையத் தொடங்கின.இப்போதும் முழுமையாக இந்த மோசடிகள் ஒழிந்துவிடவில்லை.
  • ஒரு திரைப்படத்தில் வந்த மற்றொரு காட்சி இது: ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு மலைக்கு வரும் பக்தர்களுக்கு கடவுளை நேரே காட்டுவதாகக் கூறுவார் நடிகர் வடிவேலு. அதற்கு ஒரு கட்டணம் நிர்ணயிப்பார். கடவுளைப் பார்க்கும் ஆர்வத்தில் மக்கள் பணத்தையும் வாரி வாரி கொடுப்பார்கள். நடிகர் வடிவேலு குறித்த நாளில் குறித்த நேரத்தில் மலையடிவாரத்தில் கடவுளைப் பார்க்க பணம் கொடுத்தவர்கள் கூடி நிற்பார்கள். ‘கடவுள் வருவார்’ என்று கூறிக் கொண்டே இருப்பார் வடிவேலு. நேரம் ஆக, ஆக, கூட்டத்தில் ஒருவர், ‘என்னடா, ஏமாத்துற, கடவுளே தெரியல்ல’ என்று கேள்வி கேட்கத் தொடங்கியவுடன், நடிகர் வடிவேலுவுக்கு சட்டென்று ஒரு யோசனை வரும். “யார் உண்மையான பத்தினிக்குப் பிறந்தார்களோ அவர்கள் கண்களுக்கு மட்டும் கடவுள் தெரிவார்; இப்போது கடவுள் தெரிவாரே?” என்று கேட்பார். கூட்டத்தில் ஒருவர், “பேசாமல் கடவுள் தெரிகிறார் என்று கூறி விடுவோம். இல்லாவிட்டால் நமது பிறப்பையே சந்தேகித்து விடுவார்கள்” என்று கூறி, ‘கடவுள் தெரிகிறார்’ என்று கூறியவுடன் கூட்டத்தினர் அனைவருமே, “ஆமாம்! ஆமாம்! கடவுள் தெரிகிறார்; நன்றாக பார்த்தோம்” என்று கூறிவிட்டு கலைந்து போவார்கள். இப்படி சமூகம் கட்டமைத்த உணர்வுகளைப் பயன்படுத்தி மக்களின் சிந்திக்கும் திறனை முடக்கி அறியாமையில் ஆழ்த்தியதை அக்காட்சி படம் பிடித்து காட்டியது.
  • தனியார் பேருந்துகள் வெளியூர்களுக்கு புறப்படும்போது தேங்காய் உடைக் கிறார்கள். பேருந்து சக்கரத்தில் எலுமிச்சைப் பழத்தை வைத்து சக்கரத்தை அதன் மீது ஏற்றிய பிறகு பேருந்தை ஓட்டுநர் எடுக்கிறார். இப்படி எல்லாம் செய்தால் விபத்துகள் நிகழாது என்று நம்புகிறார்கள். ஆனால் இந்தியா விலேயே சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் மாநிலமாக தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. தேங்காய்உடைப்பதாலோ எலுமிச்சம் பழத்தின் மீது ‘டயரை’ ஏற்றுவதனாலேயோ விபத்துகள் குறைந்து விடவில்லை. நடிகர் விவேக் ஒரு திரைப்படத்தில் இப்படி கேட்பார்: “வண்டிக்குள் இருக்கும் 250 பாகங்களில் ஓடாத வண்டியாடா, இந்த எலுமிச்சம் பழத்தாலே ஓடப் போகிறது?” இதுதான் அறிவியல் சிந்தனை. இப்படி சடங்குகளுடன் வாகனத்தை ஓட்டும் ஓட்டுனர்களில் சிலர் குடி போதையில் ஓட்டி விபத்துக்குள்ளான செய்திகளும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அறிவியலுக்கு எதிரான சடங்குகளும் நம்பிக்கைகளும் சமூகத்தைக் காப்பாற்றிடாது.
  • நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு திரைப்படத்தில் காவி உடையுடன் பேய்ஓட்டும் மந்திரவாதியாக வருவார். மரணத்தின் விளிம்பில் நிற்கும் ஒரு மூதாட்டிக்கு ‘பேய்’ பிடித்து விட்டதாகக் கூறி வடிவேலு ‘பேய்’ ஓட்ட வருவார். மூதாட்டியின் உடலுக்குள் புகுந்து கொண்டிருந்த ‘பேயை’ வெளியேவா என்று உரத்தக் குரலில்மிரட்டுவார். ‘பேய்புகுந்த பாட்டி’ “தன்னை இளம் வயதில் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி ஓடினான் ஒருவன், அவனோடு இப்போது தனக்கு முதலிரவை நடத்த வேண்டும்; இல்லாவிட்டால் இறங்க மாட்டேன்” என்று ‘பேய் பிடித்த பாட்டி கூறுவார். கடைசியில் சீடனிடமிருந்து சாட்டையை வாங்கி பாட்டியை நோக்கி ஒரே ஒரு முறை சுழற்றி அடிப்பார். உடனே பாட்டி மண்டையைப் போட்டு விடுவார். கூட்டத்தினர் தன்னை துவைத்து எடுத்து விடுவார்கள் என்ற அச்சத்தில் வடிவேலு திடீரென ஒரு ஏமாற்றுத் திட்டத்தை அரங்கேற்றுவார். “ஏய்பேய், பாட்டியையே நீ கொன்று விட்டாயா? நீ எங்கே போனாலும் உன்னை சாகடிக்காமல் விட மாட்டேன்” என்று கூச்சல் போட்டுக் கொண்டே சாட்டையை சுழற்றிக் கொண்டு ‘பேயை’ துரத்திக் கொண்டு ஓட்டம் பிடிப்பார். கூட்டத்திலிருந்து தப்பிக்க அவர் இப்படி ஒரு நாடகத்தை நடத்தினாலும் கூட்டத்தினரோ, “சாமியார், எவ்வளவு நல்லவரப்பா… தனது உயிரையே பணயம் வைத்து பேயை துரத்திட்டு ஓடுறாரு பாரு” என்று சாமியாரைப் பெருமையாகப் பேசுவார்கள். அப்போது வடிவேலு ஓடிக் கொண்டே பேசுவார்: “இப்படிப்பட்ட முட்டாள் ஜனங்கள் இருக்குற வரைக்கும் எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.” மக்களின் அறியாமைதான் இப்படிப்பட்ட சாமியார்களை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. மக்களும் வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
  • பாம்பு கடித்துவிட்டால் உடனே மந்திரவாதியை அழைத்து வந்து வேப்பிலை அடித்து ‘மந்திரம்’ ஓத வைத்தால் விஷம் இறங்கிவிடும் என்ற மூடநம்பிக்கையால் பலியான உயிர்கள் ஏராளம். பாம்புக் கடிக்கு மருந்து கண்டு பிடிக்கப்பட்டு, மருத்துவரிடம் உடனே கொண்டு போக வேண்டும் என்று மக்களிடம் உணர்த்தியதால் மந்திரவாதியிடம் போகாமல் மருத்துவரிடம் போகும் நிலை உருவாகியிருக்கிறது.
  • பச்சிளம் குழந்தைகளை பூமிக்குள் குழித் தோண்டி புதைத்து மண்ணை மூடி பிறகு சில நிமிடங்களுக்குப் பிறகு குழந்தையை வெளியே எடுக்கும் உயிருக்கு ஆபத்தான ஒரு சடங்கு சில கோயில்களில் நடந்தது. சில ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு இந்த ஆபத்தான சடங்குக்கு தடை போட்டது.
  • திருச்சி மாவட்டம் குளித்தலை வட்டத்தில் மகாதானபுரம் மகாலட்சுமி அம்மன் கோயில் திரு விழாவில் தலையில் தேங்காய் உடைக்கும் சடங்கு ஒன்று இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது. வாட்டசாட்டமாக சாமியாடிக் கொண்டே வரும் கோயில் பூசாரி, வரிசையாக அமர்ந்திருக்கும் ஒவ்வொரு பக்தர்கள் தலையிலும் தேங்காயை உடைக்கிறார். அவருடன் வரும் இளைஞர்கள் தேங்காய் உடைபடப் போகும் தலையை இறுக்கிப்பிடித்துக் கொள்கிறார்கள். இப்படி சளைக்காமல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில் தேங்காய்உடைக்கப்படுகிறது. முதல்முறை தேங்காய்உடையா விட்டால் இரண்டாம் முறை தலையில் உடைக்கிறார் பூசாரி. மண்டை உடைந்து இரத்தம் கொட்டினால், “தெய்வக் குத்தம் செஞ்சிருப்பாங்க; இல்லைன்னா ‘சுத்தபத்தமா’ வந்திருக்க மாட்டாங்க” என்று காரணம் கூறி விடுகிறார்கள். பல்லாயிரக்கணக்கான நரம்பு மண்டலங்களை உள்ளடக்கி உடலின் இயக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ‘மனிதத்தலைக்கு’ ஆபத்துக்களை உருவாக்கும் இத்தகைய சடங்குகளை நமது மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அறிவியல் சிந்தனை இருக்குமானால் இப்படி ‘ஆபத்து’களுக்கு ‘தலை’யை விலையாகக் கொடுப்பார்களா?

தொகுப்பு : இரா

பெரியார் முழக்கம் 22072016 இதழ்

 

You may also like...