வினாக்கள்… விடைகள்…!

ஏழுமலையானுக்கு பக்தர்கள் ‘பட்டு வஸ்திர’ காணிக்கையை இடைத்தரகர் மூலம் வழங்க வேண்டாம். தரமில்லாத பட்டாக இருக்கிறது. இனி பக்தர்கள் பகவானுக்கு நேரடியாகவே வழங்க லாம்.    – தேவஸ்தானம் அறிவிப்பு

அதேபோல் மூலஸ்தானத்திலும் இடைத்தரகர்களை ஒழித்து, பக்தர்களுக்கு பகவானிட மிருந்து நேரடியான – தரமான ‘தரிசனம்’ கிடைக்க ஏற்பாடு செஞ்சிடுங்க!

காஞ்சி ‘வரதராஜப் பெருமாளுக்கு’ பெங்களூரைச் சேர்ந்த ஒரு ‘அய்யங்கார்’ பக்தர், ரூ.50 லட்சம் மதிப்புள்ள வைரக் கிரீடம் காணிக்கை.        – செய்தி

இது வெறும் காணிக்கை இல்லைங்கோ; நன்றிக் காணிக்கை! ‘பெருமாள்’ கண் முன்னே சங்கர்ராமன் வெட்டிக் கொலை செய்த குற்றவாளிகளை மவுன சாட்சியாக நின்று காப்பாற்றியதற்கு நன்றி காணிக்கை!

விளையாட்டு அமைப்புகளில் அரசியல்வாதிகள் முக்கிய பொறுப்புகளில் இருக்கக் கூடாது.           – ராகுல் காந்தி

அரசியல் விளையாட்டில் நல்ல அனுபவமுள்ளவர்களை இப்படி, ஓரங்கட்டக் கூடாது, ராகுல்ஜி!

நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை மட்டுமே தேர்தல் அறிக்கையில் அரசியல் கட்சிகள் அறிவிக்க வேண்டும்.   – தேர்தல் ஆணையம்

சரி; அப்படியே அறிவிச்சுடலாம். நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு போகவே மாட்டோம்; அப்படிப் போனாலும் முடக்கிக் காட்டுவோம்!

காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை காங்கிரஸ் தொண்டர்களே வாக்களித்து தேர்ந்தெடுப்பார்கள்.  – ராகுல் காந்தி புதிய திட்டம்

நல்ல திட்டம்தான். ஆனால், எங்க தமிழ்நாட்டுல காங் கிரசுக்கு  வேட்பாளர்கள் மட்டும் தானே இருக்காங்க. அப்ப, தொண்டர்களுக்கு எங்கே போவிங்க?

ராஜிவ் கொலை செய்யப்பட்ட இடத்திலேயே இருந்த முருகன், சாந்தனை விடுதலை செய்வதா?  – ஈ.வெ.கி.எஸ். இளங்கோவன் ஆவேசம்

அந்த இடத்துல இருவருமே இல்லைன்னு சி.பி.அய். சொல்லுது! அப்போது ஈ.வெ.கி.எஸ். இளங்கோவன் இந்த பூமியில்தான் இருந்தாரா? அதை முதலில் கண்டு பிடிக்கணும்!

ஆமதாபாத் காந்தி ஆசிரமத்தில் நான்கு நாட்கள் தங்கி காந்தியைப் போல் எளிமையாக வாழும் சுற்றுலாத் திட்டத்தில் பங்கேற்க ஒருவர்கூட முன்வரவில்லை.  – செய்தி

சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மேனகா காந்தி என்று ஏகப்பட்ட காந்திகள் இருக்காங்களே, அவுங்ககூடவா வரவில்லை?

இந்தியா வல்லரசாக வேண்டுமானால் ஒட்டுமொத்த இந்தியர்களும் முன்னேற வேண்டும். ஜாதி, மதம் ஆகியவற்றுக்கு இடமில்லை.   – ‘தினமலரில்’ ராமகோபாலன்

‘ஆமாம்’, ‘இந்து முன்னணியை கலைச்சிட்டு, ‘இந்தியர் முன்னணி’ தொடங்கப் போறோம்! தேர்தல் முடியும் வரை நாங்க ‘பிராமணாள்’ இல்ல; இந்திய குடிமகனா யிட்டோம், நம்புங்கோ!

ராஜிவ் ‘கொலையாளி’களை விடுதலை செய்த தமிழக அரசை உடனே 356 ஆவது பிரிவின் கீழ் ‘டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.   – சுப்ரமணியசாமி

வந்துட்டாரப்பா, வடிவேலு! முதலில் தமிழக அரசின் முடிவை ஆதரிக்கும் இல.கணேசனை கட்சியிலிருந்து ‘டிஸ்மிஸ்’ செய்யுங்க!

மரண தண்டனையை நான் ஏற்கவில்லை, ஆனால், தேசத் தலைவரைக் கொன்றவர்களை விடுதலை செய்யவே கூடாது. – ராகுல் காந்தி

மரணம் அடையும் வரை சிறையிலே அடைத்து வைத்து பிணமானப் பிறகு விடுதலை செய்வதும் மரண தண்டனை தான்; புரிஞ்சுக்கோங்க!

வெண்டிடோனிகன் என்ற இந்துமத ஆராய்ச்சியாளர் இந்து மதம் பற்றி எழுதி வெளியிட்ட நூலுக்கு ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ‘பெங்குயின்’ வெளியீட்டகம் நூலை விற்பனை செய்யாமல் திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டது.  – செய்தி

இந்துமதத்தை எவரும் விமர்சிக்கக்கூடாது. ஆனால் ஒடுக்கப்பட்ட ‘இந்து மக்களை’ இழிவுபடுத்தும் மனு சாஸ்திரம், பகவத் கீதைகளை நூலாக பரப்புவீங்க. ‘சூத்திரப் பசங்க’ன்னா இளிச்சவாய்ங்க! அப்படித் தானே

பெரியார் முழக்கம் 27022014 இதழ்

You may also like...