அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆ. இராசா, பாலபிரஜாபதி அடிகளார், வன்னிஅரசு, மதுக்கூர் ராமலிங்கம், மருத்துவர் எழிலன், சுந்தரவள்ளி உள்ளிட்ட பல்வேறு சிந்தனையாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்கள். ட அண்ணா தீட்டிய ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்’ பொம்மலாட்டம்; புரட்சிகர கலை நிகழ்ச்சிகள்; திரிபுவாதங்களைத் தோலுரிக்கும் கருத்தரங்குகள் சேலம் மாநாடு எழுச்சி; மக்கள் பேராதரவு, களப்பணிகளில் தோழர்கள் உற்சாகம்

சேலத்தில் ஏப். 29, 30 தேதிகளில் கழகம் நடத்தவிருக்கும் சனாதன சக்திகளே, தமிழகத்தில் நீங்கள் காலூன்ற முடியாது என்று எச்சரிக்கும் இளைஞர்கள் மாநாட்டுக்கு மக்களிடையே பேராதரவு கிடைத்து வருகிறது. ‘கருப்பு – சிவப்பு – நீலம்’ என்று பெரியார் – அம்பேத்கர் – மார்க்சிஸ்ட் சிந்தனையாளர்கள் இணைந்து சனாதன எதிர்ப்பில் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்பதை எதிரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் மாநாடாக திராவிடர் விடுதலைக் கழகம் ஒழுங்கு செய்துள்ளது; இது காலத்தின் தேவை!

மாநாட்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா, விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம், வைகுண்டர் வழி வந்த பால பிராஜாபதி அடிகள் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், சிந்தனையாளர்கள் பங்கேற்கிறார்கள். கருத்தரங்குகளில் பங்கேற்று உரையாற்றுவோர் பெரும்பாலும் துடிப்பு மிக்க இளைய தலைமுறை.

  • பேரறிஞர் அண்ணா எழுதி, அவரே காகப்பட்டர் வேடம் ஏந்தி நடித்த ‘இந்து கண்ட சாம்ராஜ்யம்’ வரலாற்று நாடகத்தை பொம்மலாட்டக் கலை வழியாக மு. கலைவாணன் குழுவினர் நிகழ்த்துகிறார்கள். இதில் நடித்த சிவாஜி கணேசன் நடிப்பைப் பாராட்டி அவருக்கு பெரியார் தந்ததுதான் ‘சிவாஜி’ பட்டம்.
  • புதுவை விடுதலைக் குரல், மக்கள் கலை இலக்கிய மய்யக் குழு சார்பில் கோவன் புரட்சிகர இசைக் குழு, நாடகம், பாடல் வழியாக கலை நிகழ்ச்சிகளை நடத்தும் விரட்டுக் குழு, கலைக் குழு, மேட்டூர் கழகத் தோழர்களின் டி.கே.ஆர். இசைக் குழுவின் கலை நிகழ்ச்சிகள் இரண்டு நாள் மாநாடுகளிலும் எழுச்சியூட்டத் தயாராகி வருகிறது.

மாநாட்டில் கருத்தரங்கம், உரை வீச்சு, ஆய்வரங்குகளில் பங்கேற்று இளம் தலைமுறை தனது செறிவான கருத்துகளை முன்வைக்கப் போகிறது. கழகக் குடும்பத்தின் பெரியாரிய விழுதுகள் நடத்தும் கலை நிகழ்ச்சிகளும் உண்டு. இடைவிடாமல் இரண்டு நாள்களும் இடைவின்றி அரங்கத்தை சூடேற்றி சனாதன பார்ப்பன சக்திகளுக்கு எச்சரிக்கை விடுக்க ஓயாத பணிகளுடன் களமிறங்கி விட்டனர் கழகத் தோழர்கள்.

  • சென்னை, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, பழனி, மேட்டுப் பாளையம், ஆனைமலை உள்ளிட்ட பல ஊர்களில் தோழர்கள் விடிய விடிய சுவரெழுத்துகளை எழுதி வருகின்றனர். பணிகளைத் தொடங்காத ஏனைய ஊர்களிலும் விரைவில் சுவரெழுத்துகளைத் தொடங்க தோழர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள்.
  • மக்களிடம் கடைகடையாக வீதி வீதியாகச் சென்று தோழர்கள் மாநாட்டுக்கு நிதி வசூல் செய்கிறார்கள். மலர்ந்த முகத்துடன் மக்கள் வரவேற்கிறார்கள். பேரணி மாநாட்டின் முத்தாய்ப்பாக இருக்கும். பல்லாயிரக்கணக்கில் சீருடையுடன் இளைஞர்கள் – பெண்களும், ஆண்களும் அணிவகுத்து வரும் காட்சிகளை கற்பனையில் நினைத்துப் பார்த்தாலே மெய்சிலிர்க்கிறது.
  • கொளத்தூர், நங்கவள்ளி, உக்கம்பரத்திக்காடு, ஏற்காடு, காவலாண்டியூர், கண்ணாமூச்சி, தாராமங்கலம் பகுதிகளில் தோழர்கள் தீவிரமாக மாநாட்டு துண்டறிக்கைகளை வழங்கி, மக்களிடம் நிதி திரட்டி வருகின்றனர்.

இது வரலாற்றுச் சிறப்பு மிக்க மாநாடு; திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் இரண்டு நாள் மாநாடு.

நட்பு சக்திகளுடன் இணைந்து சனாதன பார்ப்பனியத்துக்கு எச்சரிக்கை விடுக்கும் மாநாடு. தோழர்களே, மாநாட்டுப் பணிகளைத் தொடங்குவீர்!

திராவிடர் இலட்சியம் வெல்லும்;

திராவிட மாடல் அதை சொல்லும்!

பெரியார் முழக்கம் 23032023 இதழ்

 

You may also like...