1. வீர வாலி

“தோழர்களே,

இங்கு நடித்த வீரவாலி கதை நடிப்பைக் கண்டீர்கள். இதைப் பற்றி தலைமை வகித்தவன் என்கின்ற முறையில் ஏதாவது பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.

இந்தக் கதை இராமாயணக் கதையில் வரும் ஒரு பாகத்தை யொட்டி செய்யப்பட்ட கற்பனைச் சித்திரமாகும். இராமாயணமே ஒரு கற்பனைக் கதை. அதை மதவாதிகள் மதக்கதையாகவும், ஒரு வகை ஆஸ்திகர்கள் கடவுள் கதையாகவும் ஆக்கிவிட்டார்கள். அக்கதை இன்று ஆரியர்களாலும் அவர்களது அடிமைகளாலும் மக்களுக்கு மதப் பிரச்சாரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த இராமாயணக் கதைக்கு மூலக்கதை என்று சொல்லப்படும் வால்மீகி ராமாயணக் கதைப்படி சரியாக எவரும் பிரச்சாரம் செய்வதில்லை, அந்தப்படி நடிப்பதும் இல்லை. ஏனெனில் அதை வால்மீகி ராமாயணப்படி நடித்தால், அது மதப்பிரச்சாரத்திற்கோ அல்லது கடவுள் பிரச்சாரத்திற்கோ சிறிதும் பயன்படாது.

காரணம் என்னவென்றால், அது ஆதியில் உண்டாக்கியவர் என்று சொல்லப்படும், (உண்மையில் அவரால் எழுதப்பட்டிருக்குமானால்) வால்மீகி முனிவர் என்பவர் அதை ஒரு மதக் கருத்துக் கொண்டோ அல்லது அதில்வரும் “நல்ல” பாத்திரங்கள் என்பவர்களான ராமன் முதலியவர் களை தெய்வங்களாகவோ, தெய்வாம்சங்களாகவோ, ஒழுக்கம் நீதி நாணயம் ஆகிய குணங் கொண்டவர்களாகவோ, அதைப் படிப்பவர்கள் கருத வேண்டுமென்றோ, அக்கருத்துக்களை அப்பாத்திரங்களுக்குள் புகுத்த வேண்டுமென்றோ கருதி சித்திரித்தாரென்று சொல்வதற்கில்லை.

இராமாயணம் மூலக்கதை அல்ல

இது ஒருபுறமிருக்க மற்றொரு சங்கதி என்னவென்றால், இந்த இராமாயணக் கதை வால்மீகியால் கொடுக்கப்பட்ட ஒரு மூலக்கதை என்றுகூட சொல்வதற்கில்லை, என்பதாகும்.

அதாவது இராமாயணமானது கந்தப்புராணம் என்னும் ஒரு சைவக் கதையைப் பார்த்து வைணவ பரமாக கற்பிக்கப்பட்டதென்றும், அதுவும் கந்தப்புராணத்தை விட வெகுகாலத்திற்குப் பிறகு கற்பிக்கப்பட்டதென்றும், சொல்ல வேண்டியிருக்கிறது. கந்தப் புராணம் புராணங்களில் சேர்ந்ததாகும். இராமாயணம் இதிகாசங்களில் சேர்ந்ததாகும். புராண காலம் முந்தியதும் இதிகாச காலம் பிந்தியதுமாகும். ஆகவே தான் புராண வகையில் சேர்ந்த கந்தப் புராணம் முந்தியதென்றும், இதிகாச வகையில் சேர்ந்த இராமாயணம் பிந்தியதென்றும் சொல்லுகிறேன்.

இரண்டும் ஒன்றே

இதில் இராமாயணம் கந்தப்புராணத்தைப் பார்த்து ஏற்படுத்தப் பட்டது என்று ஏன் சொல்லுகிறேன் என்றால், இரண்டு கதையும் ஒரே போக்கு, ஒரே கருத்து, ஒரே தன்மையதாக இருந்து வருகின்றன.

இதுவும்கூட வைணவ பரமாய் ஏற்படுத்தப்பட்டது என்பது மாத்திரமல்லாமல், வைணவபரத்தில் உள்ள மற்றொரு இதிகாசமாகிய பாரதக் கதையின் ஆபாசத்தை, இழிவை நீக்குவதற்காக, வேறு ஒரு கதை ஏற்படுத்த வேண்டி இருந்ததை அனுசரித்து, பாரதத்தில் உள்ள சில இழிவையும் அசிங்கத்தையும் பெரும் அளவுக்கு நீக்குவதற்கு கற்பிக்கப்பட்டதாகும்.

இராமாயணம் பாரதத்துக்குப் பிந்தியது

ஆதலால் இராமாயணம் கந்த புராணத்திற்கு பிந்தியதும் பாரதத்திற்குப் பிந்தியதுமாகும்.

கந்தப் புராணத்திலும் பாரதத்திலும் உள்ள சில பகுத்தறிவுக்கு ஒவ்வாத போக்குகள் இராமாயணத்தில் குறைக்கப்பட்டிருக்கின்றன. முந்தையவற்றுள் கந்தப் புராணத்தில் சிவனை முதல் கடவுளாகக் காட்டப்படுவதற்கு தேவர்கள் சிவனிடம் சென்று, அசுரர்களின் கொடுமையைப் பற்றி முறையிட்டு, தங்கள் கஷ்டங்களை நீக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதாகவும், சிவன் சுப்பிரமணியனைப் பெற்றுக் கொடுத்தாகவும் கூறப்பட்டுள்ளது. இராமாயணத்தில் விஷ்ணுவை முதற்கடவுளாகக் காட்டுவதற்காக, தேவர்கள் விஷ்ணுவிடம் சென்று தங்களை ராக்ஷதர்கள் கொடுமைப்படுத்துவதாக முறையிட்டு தங்கள் கஷ்டங்களை நீக்க வகை செய்ய வேண்டுமென்று கேட்டதாகவும், விஷ்ணு தானே அவதாரமெடுத்து வருவதாகக் கூறியதாகவும் கூறப்பட்டிருக்கிறது, இரண்டும் ஒன்றேயாகும். சிவன் தனது மகனைக் கொடுத்தார். விஷ்ணு தானே வந்தார். இருவரும் ராக்ஷதர்களையும், அசுரர்களையும். அழிப்பதற்கு வந்தவர்கள். அசுரர் ராக்கதர் என்பவர்கள் ஆரியரல்லாதவர்கள் என்றும், கறுப்பு நிறமுள்ளவர்களைத் தான் அப்படி அழைக்கப்படுகிறது என்றும், சாஸ்திர ஆதாரங்களிலேயே காணப்படுகிறது. இந்தத் தன்மையில் தான் இந்தக் கதைகள் கற்பிக்கப்பட்டிருக்கின்றன.

வாலி கதை புதியது

இராமாயணத்தில் வாலியின் பாகம் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கிறது என்றாலும், அது ஆரியர்களுக்கு ஒரு படிப்பினைக்காக சேர்க்கப் பட்டிருக்கிறது என்றே கருதுகிறேன். அதாவது ஒழுக்கம், நீதி, வீரம், என்பதெல்லாம் தன் காரிய சித்திக்கு சமயம் போல், சவுகரியம் போல் நடந்து கொள்ள வேண்டும் என்ற கொள்கையை புகுத்துவதற்கேயாகும். இது சாதாரணமாக பஞ்ச தந்திரக்கதை கொள்கையைப் பொருத்த ஒழுக்கம், நீதியேயாகும்.இந்தக் கதை மதத்திற்கும், தெய்வத் தன்மைக்கும், நீதி தர்மத்திற்கும் பயன்படும் படியாக பிற்காலத்தில் பிரச்சாரம் செய்யப்பட்டுவிட்ட படியால் அதில்கண்ட விஷயங்களை தந்திரம் என்று சொல்லாமல் அதை தெய்வத்தன்மை, பொது தர்மம், சாஸ்திர நீதி என்று சொல்லப்பட வேண்டியதாக ஆகி விட்டதுடன், அதற்கேற்ற சில்லரைத் திருத்தங்களும் சில செய்யப்பட வேண்டியதாகிவிட்டன.

அதோடு மாத்திரமல்லாமல் கதையில் வரும் குற்றமுள்ள பாத்திரங்களை குற்றமற்றவர் களாகவும், குற்றமில்லாதவர்களை கெட்டவர்களாகவும் காட்டப்பட வேண்டியதாகவும் ஆகிவிட்டது.

சாதாரணமாக வாலியை மறைந்து நின்று இராமன் கொன்றது என்பது நீதி என்றும், தெய்வத்தன்மை என்றும் ஏன் காட்டப்பட வேண்டி வந்த தென்றால் வாலி பலசாலி என்பது ஒன்று, அவன் எதிரில் நின்று எவராலும் போர் செய்ய முடியாத வரப்பிரசாதி என்பது இரண்டு, இப்படிப்பட்ட ஒரு எதிரி ஆரியர்களுக்கு ஏற்பட்டால் என்ன செய்வது என்பதற்கு உதாரணமாகத் தான் “அப்படிப்பட்டவனை அவனுக்குத் தெரியாமல் சூழ்ச்சி செய்து மறைந்து இருந்து கொல்ல வேண்டியது” என்பதை வெற்றி தர்மமாகக் காட்டப்பட்டிருக்கிறது.

விபீஷணன்

விபீஷணன் விஷயமும் இது போலவேதான். அதாவது எதிரி பலவானாய் இருந்தால், அவனை வெல்ல வேண்டுமானால் எதிரிக் கூட்டத்தில் வேற்றுமையையும், சுயநல லாப உணர்ச்சியையும் காட்டி, பிரிவினை உண்டாக்கி, ஒருவனுக்கு உதவி செய்து சுவாதீனப்படுத்திக் கொண்டு மற்றவனை (எதிரியை) ஒழித்துவிட வேண்டும் என்கின்ற வெற்றி தர்மத்தைக் காட்டவே விபீஷணன் பாகம் சித்திரிக்கப்பட்டதாகும்.

அனுமான் விஷயமாகவும் இதைத்தான் படிப்பினையாகக் காட்டப் பட்டிருக்கிறது. அனுமான் வாலியிடம் அனாமதேய அடிமையாக இருந்திருக்கிறான். சுக்கிரீவனும் கீழ்ப்பட்டவனாகவே இருந்திருக்கிறான். வாலி கிஷ்கிந்தைக்கு அரசனாவான். இருவரும் அவன் (வாலி) இல்லாத போது நாட்டைத்தங்கள் சுவாதீனம் செய்து கொண்டார்கள். வந்தவுடன் நிலைமை அறிந்து வாலியால் விரட்டி அடிக்கப்பட்டு விட்டார்கள். இராமலட்சுமணன் வந்தவுடன் அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு வாலியைக் கொல்ல வாக்கு வாங்கிக் கொண்டார்கள். இராமன் வாலியைக் கொன்று வாக்கை நிறைவேற்றி, அவர்களை பயன்படுத்தி தன் காரியத்தைச் சாதித்துக் கொண்டான். இது தான் ஆரியரின் வெற்றி தர்மமாக என்றும் இருக்க வேண்டியது என்பதற்கு எடுத்துக்காட்டாகும்; இன்று இருந்து வருவதுமாகும்.

இதன் படிப்பினை

ஆகவே “எவனைக் கொண்டும் என்ன செய்தும் காரியம் சாதித்துக் கொள்ளலாம்” என்பது தான் இராமாயணத்தின் படிப்பினையாகும். அனுமார், சுக்கிரீவன், விபீஷணன் ஆகிய இவர்கள் ஆழ்வார்களாக ஆக்கப்பட்டதற்கு காரணமும் இதுவேயாகும். “அயோக்கியர்கள் தான் ஆரியர்களால் மதிக்கப்படுவோர்கள்” என்பதற்கு நமக்கு இது ஒரு நல்ல உதாரணமாகும். இதை மெய்ப்பிக்கத்தான் நமக்கு இந்தக் கதை (வீரவாலி என்ற கதையை) நடிக்கப்பட்டது. இதில் நடிகர்கள் வாலியின் உயர் குணத்தையும் பெருந்தன்மையையும் முக்கியப்படுத்திக் காட்டி இருப்பதோடு சுக்கிரீவன், அனுமான் தன்மையையும் சரிவர வெளிப்படுத்திக் காட்டப்பட்டிருக்கிறது.

இந்த மாதிரியாக ஆரியக் கதைகளின் உட்கருத்துக்களை நன்றாக வெளிப்படுத்திக் காட்ட வேண்டியது மிகவும் அவசியமாகும். ஏனெனில் நம்மக்கள் இக்கதைகளை ஒரு தந்திரக் கதை என்று கொள்ளாமல் ஒரு தெய்வீகக் கதை என்று எண்ணுவதைப் போக்கவே ஒழிய வேறில்லை. இதற்கு ஆக நாம் கதையை மாற்ற வேண்டும் என்கின்ற அவசியம் கூட இல்லை. வால்மீகியார் எழுதி உள்ளபடி நடித்தால் போதும். அவர் (அதாவது வால்மீகியார்) இராமாயணத்தில் இராமனையும் சீதையையும் மிகமிக சாதாரண கீழ்த்தர மக்களாகத் தான் காட்டி இருக்கிறாரே ஒழிய, உயர்தரமாக எங்கும் நடவடிக்கைகள் வைத்துக் காட்டவில்லை.

வால்மீகி இராமாயணக் கதைப்படி இராமனது பட்டாபிஷேகம் நன்றாய் விளக்கப்படுகிறது

ராமன் சூட்சி

  1. அதாவது அயோத்தியை தசரதன், தான் கைகேயியை திருமணம் செய்த காலத்திலேயே கைகேயிக்கு கொடுத்துவிட்டான். அந்த நிபந்தனை மீதுதான் கேகயராஜன் தனது மகளை தசரதனுக்கு கொடுத்திருக்கிறான்.

இதை வால்மீகி இராமாயணக் கதையில் இராமன் வாயினாலேயே சொல்ல வைத்திருக்கிறார்.

இந்த விஷயத்தை இராமன் தெரிந்திருந்தே, பரதன் இல்லாத போது அவனுக்கும் அவன் தாய் கைகேயிருக்கும் தெரியாமல் பட்டாபிஷேகம் செய்து கொள்ள சம்மதித்து தகப்பன் சூழ்ச்சிக்கு இணங்குகிறான்.

தசரதன் சூட்சி

தசரதன் சூழ்ச்சி செய்கிறான் என்பதையும் வால்மீகி தசரதன் வாயினாலேயே சொல்ல வைக்கிறார். அதாவது:

இராமனைக் கூப்பிட்டு தசரதன் முடிசூட்டு விழாவைப் பற்றிச் சொல்லும்போது “பரதன் இங்கு இல்லாதிருக்கும் சமயமே முடிசூட்டுக்கு ஏற்றநாள்” என்றும் “அவன் வருவதற்குள் முடிசூட்டு நடக்கும் வரை ஜாக்கிரதையாக இரு” என்றும் தசரதன் சொன்னதாக சித்திரத்திருக்கிறார்.

சீதை இழிதன்மை

இதுபோலவே சீதையைப் பற்றியும் வால்மீகி, சீதை வாயினாலேயே அவளை கீழ்த்தரப் பெண்ணாக கித்தரித்திருக்கிறார்.

இராமன் காட்டுக்குப் போகும் போது அவன் சீதையை “அயோத்தியிலேயே இரு” என்று சொன்ன போது சீதை “என்னை பரதனுக்கு கூட்டிக் கொடுத்து அதனால் நாடு அடையப் பார்க்கிறாயா?” என்றும், லட்சுமணன் வனத்தில் சீதைக்கு காவலாக இருக்கும் போது மானின் பின் சென்ற இராமன் உடனே திரும்பி வராதது கண்டு லட்சுமணனை இராமனுக்கு உதவியாகச் செல்லும்படி சீதை சொன்னதை இலட்சுமணன் கேட்காமல், சீதைக்கு “காவல் இருக்க வேண்டியது முக்கியம்” என்று சொன்னவுடன், சீதை லட்சுமணனை “நீ என்னைக் கைப்பற்றவும் என்னை அனுபவிக்கவும் இப்படிப் பேசுகிறாய் அயோக்கியனே” என்றும், மற்றும் பல இழிமொழி சொன்னதாக சீதை வாயாலேயே சித்தரிக்கிறார்.

விபீஷணன் தன்மை

விபீஷணனை இராமன் சேர்த்துக் கொள்ளும் போது “விபீஷணன் அயோக்கியன் சகோதரத் துரோகி ஆதலால் அவனைச் சேர்க்கக் கூடாது” என்று பக்கத்தில் இருந்த லட்சுமணன் முதலிய நண்பர்கள் சொன்ன போது “அப்படிப்பட்ட அயோக்கின் தான் இப்போது நமக்கு வேண்டும்”, பரதனைப் போன்றவர்களால் நம் காரியம் ஈடேறாது என்பது ஆகச் சொல்லுவதாக இராமன் வாயாலேயே சொல்லச் செய்கிறதுடன், இவனால் நமக்கு கெடுதி செய்ய முடியாது என்று சொன்ன மாதிரியில் சித்தரிக்கிறார்.

மற்றும் பல ஒழுக்க ஈனம், நாணய ஈனம் ஆன காரியங்கள் ஏராளமாக இராமாயணக் கதையில் வரும் நல்ல பாத்திரங்கள் என்பவர்கள் மீது காணக்கிடைக்கிறது. ஆதலால் தான் வால்மீகி இராமாயணப்படி நாடகம் நடித்தாலே, இராமாயணத்தின் தெய்வீகத் தன்மை, மதத்தன்மை ஆகியவைகள் ஒழிந்து போகும் என்று சொல்லுகிறேன்” என்பதாகக் கூறி நாட்டில் நடைபெறும் கேடுகளை- விளக்க நாடக, சினிமா துறையில் செய்யவேண்டிய திருத்தங்களைப் பற்றியும் அவைகளைச் செய்யக் கறுப்புச் சட்டைப்படை வேலை செய்யும் என்றும், பேசினார்.

பின் குறிப்பு : சேலம் ஜில்லா எடப்பாடியில் 27.12.46 ஜலகண்டபுரம் தோழர் ஜே.பி.கண்ணன் அவர்களால் சித்தரிக்கப்பட்ட கதை, தோழர் பிரதான நடிகராக இருந்து அய்யா தலைமையில் காட்டிபோது நாடக முடிவில்  ஆற்றிய உரை

குடிஅரசு தலையங்கம் 05.01.1946