‘கஜினி முகம்மதுவை’ கோயிலை கொள்ளையடிக்க அழைத்து வந்தது யார்?

சோமநாதபுரம் கோயிலை 18 முறை கொள்ளையடிக்கப் படையெடுத்து வந்த கஜினி முகம்மதுவுக்கு துணை செய்தது அந்தக் கோயில் அர்ச்சகப் பார்ப்பனர்கள்தான்.

இந்தப் பெயர் இந்திய அரசியலில் இன்றுவரை ஒரு வகையான அருவருப்பு அரசியலை அரங்கேற்றப் பயன்படுத்தப் படுகிறது. யார் இவர்? என்ன செய்தார்?

மன்னர்கள் என்றாலே மக்களை அடக்கியவர்கள் என்ற உண்மையை மறந்துவிடலாகாது.அதில் கஜினி மட்டும் ஏன் கொடூர மனிதராக சித்தரிக்கப்படுகிறார் என்ற அரசியல் புரிதலுக்காகவே இந்தப்பதிவு.

அந்தக் கால அரசர்கள் எந்தப் பகுதியின் மீது படையெடுத்தால் பெருத்த செல்வத்தை அள்ளிக் கொண்டு வரலாம் என்று கணக்குப் போடுவதில் மட்டுமே குறியாய் இருப்பார்கள். படை யெடுத்து அகப்பட்டதை சுருட்டிக் கொண்டு போவது ஒரு வகை. கைப்பற்றிய பகுதியை தொடர்ந்து தன்னுடைய ஆட்சியின் கீழ் வைத்துக் கொண்டு மேலும் மேலும் கொள்ளையடிப்பது இன்னொரு வகை.

இருவகையினரின் நோக்கம் ஒரே வகை யானது தான் என்றாலும், அகப்பட்டதை சுருட்டிக் கொண்டு ஓடுபவர்கள் தங்கள் வரலாறை எழுதி வைப்பதில்லை.தொடர்ந்து ஆட்சி செய்பவர்கள் தங்களின் வீர, தீர பராக் கிரமங்களை எவ்வளவு கேவலாமானவனாய் இருந்தாலும், சிறப்பாக எழுதி விடுவார்கள். அவனைப் புகழந்து பாடி பொரி, அவுல் வாங்கித் தின்னும் புலவர் புடலங் காய்களும் புறப்பட்டு விடுவார்கள். அது பிறகு வரலாறு ஆகிவிடுகிறது.

இத்தகைய இரு வகையினரில் முதல் வகையினர் கொள்ளைக்காரர்கள் என்றும், இரண்டாவது வகையினர் பொய், புரட்டு மூலம் யோக்கியவான்கள் ஆகி விடுவார்கள்.

இதைத் தான் இன்று வரலாறு என்று சொல்லிக் கொடுக்கிறார்கள். இங்கேயே இருந்து கஜினி தன் வரலாறை எழுதியிருந்தால், அது எப்படி இருந்திருக்கும்? அந்த வாய்ப்பு கஜினிக்கு கிடைக் காமல் போயிருக்கலாம், இல்லையேல் அதைப்பற்றி அவன் கவலைப் படாமல் போயிருக்கலாம்.

ஆனால் 17 முறை படையெடுத்து 18 வது முறை கொள்ளையடித்து சென்றது எப்படி என்பதைத் தான் யோசிக்கவேண்டும்.

பெயர் முகமது தான். கஜினி என்ற பகுதியை ஆண்டதால் கஜினி முகம்மது. இந்தப் பதிவில் சொல்லப் போகும்  கருத்துகள் எனது கருத்தல்ல. யார் இதைச் சொன்னார்கள் என்று இறுதியாகச் சொல்கிறேன்.அப்பொழுது மிகவும் வியப்பில் ஆழ்ந்து விடுவீர்கள்.

“இன்றைய குஜராத் அந்தக்காலத்தில் ஆறு அரசர்களால் ஆளப்பட்ட பகுதி. இங்குள்ள சோம நாதர் ஆலயம் மிகவும் பிரசித்திபெற்றது.அதற்குக் காரணம் இந்தக்கோவிலின் லிங்கம் எந்தப் பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கியதுதான்.(எப்படி என்று சொல்லாமல் பதிவு முடியாது).

இதன் சிறப்புக்காரணமாக ஏராளமான பக்தர்களை அந்தக்கோவில் ஈர்த்ததில் ஆச்சரியம் இல்லை.எனவே சொல்லமுடியாத அளவு செல்வம் கோவிலில் பக்தர்களால் குவிந்தது.குஜராத்தின் ஆறு அரசர்களும் அந்தக் கோவிலின் காப்பாளர்களாக இருந்தனர்.

கோவிலின் அர்ச்சகர்கள் எத்தனைபேர் தெரியுமா? 11,000 பேர்.

எந்நேரமும் பரபரப்பாக இருந்த இந்தக் கோவிலில் கோடிக்கணக்கான சொத்தும் சேர்ந்து கொண்டிருந்தது. அதை எப்படியேனும் கொள்ளை யடிக்கவேண்டும் என்ற திட்டமும் பலருக்கும் இருந்தது.

கஜினி படையெடுத்து வந்தபோதெல்லாம் குஜராத்தின் ஆறு அரசர்களும் ஒன்றுசேர்ந்து அவனைத் தடுத்து தோற்று ஓடச் செய்தனர்.

கி.பி 997 முதல் 1030 வரை 33 ஆண்டுகாலம் கஜினி தன் முயற்சியை கைவிடவில்லை. பரீட்சையில் தோற்கும் மாணவர்களுக்கு கஜினியே இன்றும் உந்துசக்தியாக இருக்கிறார்.

பதினெட்டாவது முறையாக 25,000 போர் வீரர்களுடன் சோமநாதபுரத்திலிருந்து எட்டு மைல் தூரம் முகாம் போட்டு காத்திருந்தான் கஜினி.

கஜினி படையெடுத்து வந்ததை ஒற்றர்கள் மூலம் அறிந்த அரசர்கள் ஆறுபேரும் கோவிலின் தலைமை பார்ப்பன அர்ச்சகரிடம் போய் ஒரு கோரிக்கை வைத்தனர். நம்மிடம் நாலரை லட்சம் வீரர்கள் உள்ளனர். கஜினியிடம் 25,000 பேர் மட்டுமே உள்ளனர்.எளிதில் விரட்டிவிடலாம் என்று அனுமதி கேட்டனர். (மன்னர் படையெடுப்புக்கு அனுமதியை பார்ப்பன அர்ச்சககர்களிடம்தான் கேட்கவேண்டும்)

ஆனால் தலைமை பார்ப்பன அர்ச்சகர் அதற்கு உடன்படவில்லை.

அர்ச்சகர் என்றால் சும்மாவா?அரசனுக்கும் மேலே உள்ளவன்.அர்ச்சகர் சொல்கிறார் கேளுங்கள். “மிலேச்சன் படையெடுத்து வருவதை கணேசனும், காளியும் கனவில் வந்து தன்னிடம் சொன்னதாகவும், ஆனால் விசேஷமாய் ஹோமங்களும், அன்னதானம், சுவர்ணதானம், கன்னிகாதானம் ஆகியவை நடத்த வேண்டுமென கூறியதாகவும் சொல்லி, அரசர்களிடம் அதைச் செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.

ஏன் இப்படிச் செய்தார்?

இந்த அரசர்களுக்கு வரவர புராணங்களிலும், ‘பிராமணங்களிலும்’, நம்பிக்கை குறைந்து வருவதால்தான் இப்படிப்பட்ட இடையூறுகள் தொடர்ந்து வருவதாக அர்ச்சகர் அரசர்களைக் கடிந்து கொண்டார். இனிமேலாவது பிராமணர்களின் அறிவுரை கேட்டு நடக்கும்படியும், யுத்தத்திற்கு ஆகும் செலவை பிராமணர்களுக்கு தானம் கொடுத்துவிடுமாறு கட்டளையிட்டு, யாக சாலை நிறுவும் பணியில் ஈடுபட்டார்.

தனது ஒற்றர்கள் செய்திக்காக கஜினி காத்திருக்க, சோமநாதபுரத்திலோ 1008 யாக சாலைகள் நிறுவி, குழிகளில் நெருப்பு வளர்த்து, நெய், கோதுமை, சந்தனம் முதலானவை எரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. பல நூறுபேர் எதிரியிடமிருந்து காப்பாற்றவேண்டி கழுத்தளவு தண்ணீரில் நின்று தவம் செய்தார்கள்.போர் வீரர்கள் நமக்கு என்ன என்று தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

கஜினிக்கு இந்தத் தகவல் போய் சேர்ந்தது. அடுத்து என்ன?

யாக சாலைகளில் நெருப்பு எரிவதையும், ஆயிரக்கணக்கான குழிகளில் புகை வருவதையும், நூற்றுக்கணக்கான தலைகள் தண்ணீரில் மிதந்து கொண்டிருப்பதையும் பார்த்த கஜினியின் ஒற்றர்கள் பயந்து போனார்கள். அவர்களுக்கு இது ஏன் என்று புரியவில்லை.இதை கஜினியிடம் சொன்னார்கள்.

கஜினி தனது மதகுருவான மவுல்லியிடம் ஆலோசித்தான்.

மவுல்லி உடனே இது காபரினுடைய ஜின்னுகளின் (சாத்தான்கள்) வேலை என்று சொல்லி, நான் குரான் வாசித்தால் ஜின்னுகள் ஓடிவிடும் நீங்கள் படையை நகர்த்துங்கள் என்று கட்டளையிட்டார்.

கஜினியின் படைகள் வரும் சேதி தெரிந்ததும், 11000 புரோகிதர்களில் தலைமை அர்ச்சகர் உட்பட எண்ணூறு புரோகிதர்கள் தவிர மற்ற புரோகிதர்களும், மேலும் பலரும் அகப்பட்டதை அள்ளிக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

தலைமை அர்ச்சகர் தமது முத்துப்பல்லக்கை நன்றாகச் சிங்காரித்து சீடர்களையும்,கோவில் தாசிகளையும் கஜினியை எதிர்கொண்டு வரவேற்று அழைத்துவர அனுப்பிவைத்தார்.

முத்துப் பல்லக்கை தனது ஒட்டகத்தின் மீது போடவைத்து, அதன் மீது ஏறி அமர்ந்து கஜினி கம்பீரமாக சோமநாதர் ஆலயத்திற்கு வந்து சேர்ந்தான்.கோவிலின் உள்ளே கஜினி அமர சிங்காதனம் (ஆடம்பர இருக்கை) போடப்பட் டிருந்தது.அந்த சிங்காதனத்தின் பெயர் வியாசபீடம் என்பதாகும்.இந்த சிங்காதனத்தின் அன்றைய மதிப்பு 50 லட்சம் ரூபாய் ஆகும்.

கஜினி கோவிலில் போடப்பட்ட பீடத்தில் கம்பீரமாய் அமர, தலைமை பார்ப்பன அர்ச்சகர் கஜினியிடம் “இங்கு போலி ராஜாக்கள் தங்களைப் பற்றி என்னென்னவோ சொன்னார்கள்.ஆ னால் நான் அவர்களை எல்லாம் அடக்கி வைத்தேன்” என்று கூறிவிட்டு, விஷ்ணு அல்லாதவன் அரசனாய் இருக்க முடியாது. (நா விஷ்ணு ப்ருத்வீ பதி) என்று வேதங்கள் சொல்கிறது.

எனவே விஷ்ணுவின் அவதாரமான தங்களின் நேர்மையான ஆட்சி எங்களை இரட்சிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துவிட்டு, எங்களுக்கு எந்த இடையூறும் செய்ய வேண்டாம் என்று கூறி 3 கோடி ரூபாய் காணிக்கை தருவதாகக் கூறினார்.

யாரையும் இரட்சிக்க நான் வரவில்லை. சொத்துக்கள் எங்கே இருக்கிறது காட்டுங்கள் என்று கஜினி கூற, அர்ச்சகர் கொண்டு வந்து கொடுக்க, அதை கணக்கிட்டுப் பார்த்தால் கேள்விபட்டதற்கும், கிடைத்த சொத்திற்கும் சம்பந்தமே இல்லை.

அந்தரங்கத்தில் தொங்கிய மரகத நவரத்தின லிங்கத்தை யானைகளைக் கட்டிக்கூட இழுத்துப் பார்த்துவிட்டான். அந்த சிலையைப் பிடுங்க முடியவில்லை.

அர்ச்சகரே என்னிடம் இந்த வேலை ஆகாது என்று கஜினி கூறிவிட்டு, அர்ச்சகரின் இரு கை களிலும் எண்ணெய்யால் தோய்க்கப்பட்ட துணிகளைச் சுற்றி கொளுத்துமாறு கட்டளை யிட்டான். மிரண்டு போன பார்ப்பான் சொத்து இருந்த எல்லா இடத்தையும் காட்டிக் கோவிலின் கருவறையின் சுவற்றைத் துளையிட்டால் போதும் லிங்கம் விழுந்துவிடும் என்று காட்டிக் கொடுக்கிறார்.

தலைமை குருவின் தலைமையில் கோவில் இடிக்கப் படுகிறது. இடிக்க இடிக்க செல்வங்கள் கொட்டிக்கொண்டே இருக்கிறது. அதுவரை காந்தக் கற்களின் உதவியோடு அந்தரத்தில் நின்ற லிங்கமும் விழுந்து நொறுங்குகிறது.

நொறுங்கி விழுந்த லிங்கத்தின் உள்ளிருந்தும் நவரத்தினங்கள் கொட்ட வாரிவாரி அள்ளிப் போட்டுக் கொண்டு 800 புரோகிதர்கள், 5000 ஆண்கள், 6000 பெண்களை கைதிகளாகப் பிடித்துக் கொண்டு கஜினி சென்றான்.

இன்னும் இருக்கு…. இவ்வளவு சுவாரஸ்யமாக நடந்த சம்பவங்களை சொல்லியது யார்?என்ன ஆதாரம்? அப்புடின்னு கேளுங்களேன்.

இந்த விபரங்கள் சுவையான கதைபோல தோன்றலாம். அதீதமான கற்பனை என்றும் நினைக்கலாம்.

குஜராத்தி, உருது மொழியிலுள்ள நூல்களில் தேடி எடுத்து நூலாக எழுதியவர் வேறு யாருமல்ல. வேதங்களை நோக்கி திரும்புமாறு இந்திய மக்களை அறைகூவி அழைத்த, ஆரிய சமாஜத்தை நிறுவிய சுவாமி தயானந்த சரஸ்வதிதான், இந்த வரலாற்றை எழுதியிருக்கிறார்.

சுவாமி தயானந்த சரஸ்வதி குஜராத் மாநிலம் டன்காரா எனுமிடத்தில் பார்ப்பன குடும்பத்தில் பிறந்தவர். 1875இல் ஆரிய சமாஜத்தை தோற்றுவித்தவர். 1883 அக்டோபர் 30 இறந்தார்.

அவர் இந்தியா முழுமையும் சுற்றி மதுராபுரியில் எழுதி வெளியிட்ட “சத்தியார்த்தப் பிரகாசம்” என்ற நூலில் 11ஆவது அத்தியாயத்தில் கஜினி படையெடுப்பு குறித்து விலாவாரியாக எழுதியுள்ளார். இதுவரை தெரிவித்தக் கருத்துகள் அவர் நூலின் விளக்கம்தான்.

கஜினி மற்றும் முகலாய மன்னர்கள் எல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் என்றும் இந்துக்களை வதைப்பதே அவர்கள் வேலை என்றும் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரம் செய்கிறது. ஏன் இந்தப் பிரச்சாரம்? உண்மை என்ன?

முகலாயச் சக்கரவர்த்திகளுக்கு முன்னால் பல முஸ்லிம் ஆட்சியாளர்கள் இங்கு ஆண்டுள்ளனர். கி.பி.1192இல் முகமது கோரியும், கி.பி 1206இல் குதுப்-உத்-தீனும், கி.பி.1296இல் அலாவுதீன் கில்ஜியும், கி.பி.1325இல் முகமது -பின்-துக்ளக்கும்,கி.பி.1414 முதல் கி.பி.1450 வரை டெல்லியில் சையதுகளின் ஆட்சியும்,கி.பி 1451ல் ஆப்கானிஸ்தான் வம்சத்தின் பஹ்லுல் லோடியும்,அதைத் தொடர்ந்து லோடி வம்ச ஆட்சியை பானிபட் போரில் வீழ்த்தி கி.பி 1526 ல் பாபர் முகலாய சாம்ராஜ்யத்தை நிறுவினார்,

இவ்வளவு காலப்பகுதியில் ஆட்சி புரிந்த முஸ்லிம் மன்னர்கள் இஸ்லாத்தை பரப்புவதற்கான வேலையை கடுமையாகச் செய்திருந்தால் இங்கு இஸ்லாமியர்கள் சிறுபான்மையினராக இருந்திருக்க மாட்டார்கள்.முஸ்லிம் மன்னர்கள் அதிக காலம் ஆண்டாலும்,பெரும்பாலான மக்கள் இந்துக்களாக இருந்தார்கள் என்பதை மறைக்க முடியுமா?

அவர்களின் நோக்கம் மதம் பரப்புவதல்ல.

சாதியை ஒழிப்பதல்ல.

அதை வைத்து அதிகாரம் செலுத்த வேண்டும் என்பதே ஆளும் வர்க்க அரசியலே.

மன்னர்களுக்கு அதிகாரத்தை நிலைநிறுத்த அனைவரும் தேவைப்பட்டார்கள். ஆர்.எஸ்.எஸ்.சும் இந்து மதத்தை வளர்ப்பதையா நோக்கமாகக் கொண்டுள்ளது. இஸ்லாமியரைப் பகைவராகக் காட்டி பார்ப்பனியத்தின் செல்வாக்கை தக்க வைப்பதே நோக்கம் என்பதை அப்பாவி இந்து மக்கள் புரியவேண்டும்.

– முகநூலிலிருந்து

நிமிர்வோம் நவம்பர் 2017 இதழ்

You may also like...