கருவிலேயே வேதப் பண்பாட்டை ஊட்டத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்.

ஆர்.எஸ்.எஸ். நடத்தும் ‘ஆரோக்கிய பாரத்’ அமைப்பு, கருவிலேயே இந்து மதநெறியோடு குழந்தைகள் பிறக்க – வேத மந்திர பயிற்சி அளிக்கிறதாம்.

அண்மையில் கொல்கத்தா உயர்நீதி மன்றத்தில் ஒரு விசித்திரமான, வழக்கொன்று விசாரணைக்கு வந்தது. மேற்கு வங்க குழந்தை உரிமைப் பாதுகாப்பு ஆணையம், சட்ட அதிகாரி நாசிப்கான் தொடுத்த பொது நல வழக்கு தான் அது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் சுகாதாரப் பிரிவு “ஆரோக்கியா பாரத்” அமைப்பு பயிற்சிப் பட்டறை ஒன்று நடத்தியுள்ளது. அந்தப் பயிற்சிப் பட்டறையின் குறிக்கோள், கணவன் -மனைவியரை அழைத்து அவர்களுக்கு அறிவுரையும், பயிற்சியும் தருவார்களாம்.

அறிவுக்கு பொருந்தாத இப்பயிற்சியை தடுக்க வேண்டும் என்பதே வழக்கு! கருவிலேயே இருக்கிற குழந்தையை தூய்மைப்படுத்துவது இதன் உள்நோக்கம் கருவிலேயே குழந்தையை அறநெறியோடு இந்துமத நெறியோடு இந்துமத தூய்மை யோடு குழந்தையை உருவாக்கி பிறக்க வைப்பது. அடுத்து கணவனை, மனைவியை அந்தத் தம்பதிகளின் மனப் பக்குவத்தை ஆய்ந்து பாரம்பரியமான இந்துத்துவ சடங்காச்சாரங்களைக் கற்றுக் கொடுத்து பிறக்கும் குழந்தைகளை தெய்வ உணர்வோடு இந்து மதநெறியோடு வளர்ப்பது என்ற பயிற்சியையும் தருவது. அதற்கு ஒரு படி மேலே போய் ஆண் பிள்ளைகளை எப்படி பெற்றெடுப்பது என்கிற பயிற்சியை சடங்குகளை, கடைப் பிடிக்க வேண்டிய விரதங்களை, உச்சரிக்க வேண்டிய மந்திரங்களையும் கற்றுக் கொடுப்பார்களாம். இது உண்மைதானா? வேதகால சாஸ்திரங்களில் ஆண் பிள்ளைகளை மட்டும் பெற்றெடுப்பதற்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

மந்திரங்கள் சொல்லிக் கொடுக்கப் பட்டன. விரதங்கள் கடைப்பிடிக்கவும் கற்றுத் தரப்பட்டன. உடல்உறவு சேர்க்கை யில்கூட இதற்கான செயல்முறைகள், சாஸ்திரங்கள் அருளப்பட்டன. தெய்வத்தின் பெயரால், மதத்தின் பெயரால் நடத்தப்பட்டன. அப்படியெல்லாம் சாஸ்திர சம்பிரதாயங்கள் கடைப்பிடித்தும், மந்திரங்கள் ஒப்பித்தும் ஆண் பிள்ளை பிறக்கவில்லையென்றால் கடைப்பிடித்த அனுஷ்டானங்களில் ஏதோ சில தவறுகள், குறைபாடுகள் இருந்திருக்கலாம். ஆகவே, குழந்தை ஆணாக பிறக்கவில்லை என்று சமாதானம் கூறப்படுமாம். இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும், இப்படி அறிவுக்குப் பொருந்தாத, நம்பிக்கை ஊட்டப்படுகிறது. மதநெறி உணர்வோடு எப்படி குழந்தை பிறக்க முடியும்.

இந்திய கிராமங்களில் கர்ப்பிணிப் பெண்களில் ரத்தசோகையோடு உள்ளோர் அனைத்து வகையான இரத்த சோகையை யும் சேர்த்து 98 சதவீதம் பேர் உள்ளனர். இதுஅதிர்ச்சி தரும் செய்தி அல்லவா? ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களாக இருக்கும் நம்நாட்டின் பிரதமர் இந்த கொடுமையை நீக்க வழி என்ன சொல்கிறார்? பங்காளதேஷ், இந்தோனேசியா, நேபாளம், மாலத்தீவு , மியான்மர், இலங்கை போன்ற நாடுகளைவிட இந்தியாவில் இரத்தசோகை கர்ப்பிணிகள் அதிகம். இது இந்தியன் மருத்துவ ஆய்வுக் கழகம் தரும் தகவல்.

வடகொரியாவைவிட, பங்களா தேசத்தைவிட, ஹைட்டி போன்ற நாடுகளைவிட இந்த பிரச்சினையில் இந்தியா மோசம். ஊட்டசத்துக்குறைவால் தொற்றுநோய்கள் சுலபமாகப் பற்றிக் கொண்டு குழந்தைகள் இறந்து போகின்றன. 80 நாடுகளில் இது விஷயமாக கணக்கெடுத்ததில் இந்தியா 67வது இடத்தில் உள்ளது. 5 வயதுக் குள்ளான 44 சதவீத குழந்தைகள் குறைந்த எடையோடு பிறந்து வாழ் கின்றன. 72 சதவீத குழந்தைகள் இரத்த சோகையில் சோர்வுற்றிருக்கின்றன.

உலக வங்கி ஆய்வின்படிகூட உலகிலேயே குறைந்த ஊட்டச்சத்தால் அவதிப்படும் குழந்தைகள் உள்ள நாட்டில் இந்தியா மிக மோசம் என்கிறது. இந்த கொடுமை எல்லாம் ஆர்.எஸ்.எஸ். நபர் களுக்கு அதனுடைய இளைய அமைப்பான ஆரோக்கியா பாரத்திற்கு தெரியாது போலும். குழந்தை பிறக்கும்போதே இந்துமத நெறியோடு ஒழுக்க சீலத்தோடு பிறக்க பயிற்சிப் பட்டறை நடத்துகிறார்கள். ஆண் குழந்தை பிறப்பதற்கு அதைவிட நுணுக்க போதனை செயல்வடிவம் தருகிறார்களாம். நாசிம்கான் என்பவர் தொடுத்த பொதுநல வழக்கின் மீது கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கேட்ட கேள்வி ஒரு சாட்டை அடி. ‘உங்கள் அமைப்பு மத நல்லொழுக்க குழந்தையாக பிறக்க நீங்கள் நடத்தும் பயிற்சிப் பட்டறைக்கு விஞ்ஞான அடிப்படையிலான நிரூபிக்கப்பட்ட ஆதாரம் சாட்சியம் ஏதேனும் உண்டா? அதை நிரூபிக்க முடியுமா’- என்று கேட்டார்.

ஆனால் அவர்கள் எந்த அடிப்படையான விஞ்ஞான ஆதாரத்தையும் காட்ட முடிய வில்லை. வழக்கம்போல நம்பிக்கைதான் என்கிறார்கள். ஒரு மோசடியான சமூகத்தை உருவாக்குவதற்கு இப்படி யெல்லாம் திட்டம் தீட்டுகிறார்கள்.

‘தீக்கதிர்’ கட்டுரையிலிருந்து சில பகுதிகள்

பெரியார் முழக்கம் 15062017 இதழ்

You may also like...