‘ஈஷா’ ஜக்கி வாசுதேவ் ‘கிரிமினல்’ பின்னணி

2011ஆம் ஆண்டு சேலம் அரசு கலைக் கல்லூரிக்கு ‘ஈஷா’ மய்யத்தின் ஜக்கி வாசுதேவ் உரையாற்ற  அழைக்கப்பட்டதை எதிர்த்து சேலம் நகர பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்ட துண்டறிக்கை – ‘ஜக்கி வாசுதேவ்’  மோசடிகளை கிழித்துக் காட்டுகிறது. இந்த செய்திகள் ‘இலஷ்மி நரசிம்மா’ என்ற மாத இதழில் (15.4.2011)  வெளிவந்துள்ளது.

இத் துண்டறிக்கை, “யோக்கியன் வருகிறான்… சொம்பெடுத்து உள்ளே வையுங்கள்!” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. ஈஷா மய்யத்தில் தங்களுடைய இரண்டு மகள்கள் கட்டாயப்படுத்தப்பட்டு மொட்டையடிக்கப்பட்டு  சன்யாசியக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை மய்யத்திலிருந்து மீட்டுத் தர வேண்டும் என்றும் கோவை வடவள்ளியைச் சார்ந்த பேராசிரியர் காமராஜ், கோவை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் புகார் தந்துள்ளார். இந்த நிலையில் ஜக்கி வாசுதேவ் என்பவர் , யார் என்பதை விளக்குகிறது இந்தத் துண்டறிக்கை. “சேலம் அரசு கலைக் கல்லூரியில் வருகிற 30.9.2011 முதல் 2.10-2011 வரை ஈஷா யோகா என்கிற பெயரில் தியானலிங்கம் என்கிற மதப் பிரச்சாரம் செய்ய ‘கிட்டு’ என்கிற ‘கிருஷ்ணமூர்த்தி’ என்கிற ‘ஜாவா வாசுதேவன்’ என்கிற ‘ஜக்கி வாசுதேவ்’ வருகிறார். இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாநகரத்தில் அமைந்துள்ள ப்ரூபாண்ட் ரோடு மேம்பாலம்   கீழ்புறத்தில் குதிரை வண்டி நிறுத்துமிடமாக பயன்பாட்டில் இருந்த இடத்தில் சில சமூக விரோதிகளுக்கு கஞ்சா வியாபாரம் செய்ததாகவும், இவருக்கு ‘ரிச்சர்ட்’ என்ற பிரபல ரவுடி வியாபாரத்தில் உதவியதாகவும், இவர்கள் இருவருக்கும் ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. வியாபாரத்தின் மூலமாகவோ அல்லது பழக்க வழக்கத்தின் மூலமாகவோ ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்தப் பெண்ணின் நிலை என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை என்றும், சில நாள்களில் ரவுடி ரிச்சர்ட்டும் கொலை செய்யப்பட்டதாகவும் கூறுகிறார்கள். அதேபோல ஜக்கியின் மனைவியை இவரே கொலை செய்துவிட்டார் என்று  வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது, பல ஆண்டுகளுக்கு முன்பே மத்திய புலனாய்வுத் துறை மூலமாக  தேடப்படும் குற்றவாளி என்று  அறிவிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

இதையெல்லாம் அறிந்த பத்திரிகை நிருபர்கள் நேரம் வரும்போது ஜிக்கியிடம் இதுபற்றி கேள்வி கேட்க வேண்டும்  என இருந்த நிலையில்… கோவை மாநகரில், மாநகராட்சிக்கு சொந்தமான வ.உ.சி. மைதானத்தில் கடந்த 13.2.2011 அன்று ஆனந்த அலை மகா சத்சங் நிகழ்ச்சியில் ஜக்கி வாசுதேவ் கலந்து கொள்ள வர இருப்பதாகவும், இது குறித்து கோவை வெஸ்ட் பிரஸ் வளாகத்தில் அன்று மாலை 5.30 மணியளவில் அனைத்து பத்திரிகையாளர்களையும் நேரில் சந்தித்து விளக்கமளிக்க இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள். சுமார் 25 பத்திரிகையாளர்கள் கலந்து கொண்ட அந்தச் சந்திப்பில் மாதம் இரு முறை வெளிவரும் ‘ஆயுதம்’ இதழின் செய்தியாளராக பணியாற்றி வந்த மூத்த பத்திரிகையாளர் எஸ்.பூபத கண்ணன் என்பவர் ஜக்கியைப் பார்த்து கீழ்  வரும் கேள்விகளை சரமாரியாகக் கேட்கத் துவங்கினார். அதன் விவரம்:-

  1. உங்கள் யோகா மையத்தில் வெளிநாட்டில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது உண்மையா?
  2. மேலும் யோகா மையத்திற்குள்ளும் உங்கள் வளாகத்தைச் சுற்றி உள்ள ஒரு சில இடங்களிலும் வெளிப்புற மரங்களிலும் இரகசிய கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது? உண்மையா?
  3. உங்கள் பெயரை ஜாவா வாசுதேவ் என்பதை எப்போது ஜக்கி வாசுதேவாக மாற்றிக் கொண்டீர்கள்? இதுவும் உண்மையா?
  4. மேலும் 1970ஆம் ஆண்டு கோவை அவிநாசி ரோடு மேம்பாலத்தின் கீழ் கஞ்சா விற்றதாக கோவை காட்டூர் பி3 காவல் நிலையத்தில் வழக்கு உள்ளதாக கூறப்படுகிறது உண்மையா? என்று சங்கு சக்கரம் சுற்றுவதுபோல அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டபோது… ஜக்கியின் முகங்கள் மாறப்பட்டு கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் உடனே ஜக்கி செய்தியாளரைப் பார்த்து, “உனக்கு மனநிலை பாதிக்கப்பட்டதுபோல உள்ளது. அதனால்தான் கேள்விகளை இப்படி கேட்கிறாய்” என்று கூற, சக பத்திரிகையாளர்கள் அதிர்ச்சியடைய – மீண்டும் ஜக்கியின் மனைவியின் சாவில் இருக்கும் கேள்விகளைக் கேட்டபோது, அருகில் இருந்த அவருடைய சீடர்களிடம் மெளனமாக ஜாடை காட்ட, 4 குண்டர்கள் செய்தியாளரை வெளியே தூக்கிக் கொண்டு வந்து ஒருவர் அவருடைய வலது கையை முறுக்கிக் கொண்டும், இன்னொருவர் அவருடைய பாக்கெட்டிற்குள் பத்திரிகையில் இவர் பணிபுரியும் அடையாள அட்டையைப் பறித்துக் கொண்டும் மற்றும் 2 பேர் தோள் பட்டையில் சரமாரியாக தாக்கினார்கள். வலி தாங்க முடியாமல் கத்தியபோது, சக பத்திரிகையாளர்கள் வெளியே வந்து பார்த்தவுடன் தாக்குதலை நிறுத்திக் கொண்டார்கள். இது சம்பந்தமாக அன்று இரவே தமிழ்நாடு பிரஸ் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜே.பி.ஆர். மற்றும் சக நிர்வாகிகளுக்கும் தெரியப்படுத்தி மறுநாள் (14.2.2011) அன்று காலை சுமார் 100க்கும் மேற்பட்ட நிருபர்கள் ஈஷா மையம் ஜக்கி மீது புகார் கொடுத்தனர்.

புகாரைப் பெற்றுக் கொண்ட கோவை மாநகர காவல்துறை ஆணையர் சைலேந்திரபாபு சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதன் அடிப்படையில் அருகிலுள்ள பந்தைய சாலை பி4 காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாருக்கு காவல்நிலைய ஆய்வாளர் நகல் காப்பியை வழங்கினார். நகலின் பதிவு எண்.433/1808. இது இன்று வரை கிணற்றில் போட்ட கல்லுபோல நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறது. அதேபோல 2006ஆம் ஆண்டு கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் இவர் மீது புகார் கொடுத்தும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டும் வழக்கின் முடிவு வெத்து வேட்டாகி இவரின் மனைவி, மகளையும் இழந்ததுதான் மிச்சம். இதுபோல பல மாவட்டங்களில் இருந்த 18 வயதிற்குட்பட்ட பெண்கள் இவரால் யோகாசனம் என்கிற மூளைச் சலவை செய்து தன்வசப்படுத்திக் கொண்டார் என்றும் குற்றச்சாட்டு உள்ளது. இப்படிப்பட்ட சந்தேகத்திற்குரிய மதவாதியான ஜக்கி வாசுதேவ் தன்னுடைய குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிப்பாரா அல்லது அமைதி காத்து குற்றவாளி என ஒத்துக் கொள்வாரா? “எந்த ஒரு அரசு வளாகத்திலும் மத பிரச்சாரம் செய்யக் கூடாது” என்று அரசு ஆணை உள்ள நிலையில் குற்ற பின்னணி உள்ள ஒரு மதவாதியை ஈசா யோகா என்கிற பெயரில் மதப் பிரச்சாரம் செய்ய அனுமதியளித்த அரசு கலைக் கல்லூரி முதல்வராவது இது குறித்து விளக்கம் அளிப்பாரா? ” – என அந்தத் துண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

– பெரியார் திராவிடர் கழகம், சேலம் மாநகரம். 2 011இல் வெளியிட்ட துண்டறிக்கை

பெரியார் முழக்கம் 11082016 இதழ்

You may also like...