சைமன் கமிஷனும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும்
நமது நாட்டில் தற்சமயம் உண்மையானதும் சுயநலமற்றதுமான பொது நல சேவை செய்கின்றவர்கள் முக்கியமாய் கவனிக்க வேண்டியது நமது நாட்டு மக்களுக்குள் கற்பிக்கப்பட்டிருக்கும் பிறப்பு-உயர்வு-தாழ்வை ஒழித்து சமத்துவத்தை ஏற்படுத்தி அவர்களை சுயமரியாதையுடன் வாழச்செய்ய வேண்டியதேயாகும். இதை நாம் பலதடவைகளில் எடுத்துக்காட்டி வந்திருக்கின்றோம். எனினும் மக்களுக்குள் சமத்துவமும் சுயமரியாதை உணர்ச்சியும் ஏற்பட்டுவிட்டால் வாழமுடியாத நிலையில் நமது நாட்டில் சில சமூகமும் சில தனிப்பட்ட மக்களும் இருப்பதால், அவர்கள் தங்கள் தங்கள் வாழ்க்கையை இவ்வித்தியாசத்தின் மீதே நிலைநிறுத்திக் கொண்டதால், அவர்கள் மற்ற வர்களின் சமத்துவத்திற்கும் சுயமரியாதைக்கும் விரோதமாக இருந்தே தங்கள் வாழ்நாட்களைக் கழிக்க வேண்டியதான நிலைமை அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டு இருப்பதை நாம் மறைத்துப் பேசுவதில் பயனில்லை. எந்த நாட்டிலும் எந்தக் காலத்திலும் இப்படிப்பட்டஒரு கூட்டம் இருந்தே வந்து தங்கள் சுயநலத்தின் பொருட்டு மக்களின் நலத்தை பாழ்படுத்தி வந்திருப்பது சரித்திர வாயிலான உண்மையேயாகும். எனினும் சமத்துவமும் சுயமரியாதையும் பெற்று முன்னேற்ற மடைந்து வரும் நாடுகளின் சரித்திரங்களைப்...