Tagged: பன்னீர் செல்வம்

பன்னீர்செல்வமே! காலம் சென்று விட்டாயா? : பெரியார் (பன்னீர்செல்வம் முடிவுக்கு எழுதிய இரங்கல்)

பன்னீர்செல்வமே! காலம் சென்று விட்டாயா? : பெரியார் (பன்னீர்செல்வம் முடிவுக்கு எழுதிய இரங்கல்)

நமது உண்மைத் தோழரும், உற்ற துணைவரும், உள்ளும் புறமும் ஒன்றாய் உள்ளவரும், தமிழர் இயக்கத்தில் உறுதியான பற்றுக் கொண்டு அல்லும் பகலும் உழைத்து வந்தவரும், நம்மிடத்தில் களங்கமற்ற அன்பும் பற்றுதலும் விசுவாசமும் கொண்டிருந்தவரும், நினைத்தால் திடுக்கிடும்படி எதிரிகள் நெஞ்சில் எப்பொழுதும் திகிலை உண்டாக்கிக் கொண்டிருந்தவருமான அருமை பன்னீர் செல்வம் அவர்களை, இன்று, காலம் சென்ற பன்னீர் செல்வம் என்று எழுத நேரிட்டதற்கு மனம் பதைக்கிறது! நெஞ்சு திக்கு திக்கென்று அடித்துக் கொள்கிறது! மெய் நடுங்குகிறது! எழுதக் கையோடவில்லை; கண் கலங்கி மறைக்கிறது; கண்ணீர் எழுத்துக்களை அழிக்கிறது! பன்னீர்செல்வத்திற்குப் பாழும் உத்தி யோகம் வந்ததும் போதும்; அது அவரது உயிருக்கே உலையாய் இருந்ததும் போதும்! தமிழர்களைப் பரிதவிக்கவிட்டுவிட்டு மறைந்து விட்டார். இந்த உத்தியோகம் ஏன் வந்ததென்றே ஒவ்வொரு வினாடியும் தோன்றுகிறது. அவருக்கடுத்தாற்போல் – யார், யார் என்று மனம் ஏங்குகிறது; தேடுகிறது; தேடித் தேடி ஏமாற்றமடைகிறது! என் மனைவி முடிவெய்தியபோதும் நான் சிறிதும்...