ராகுலை எதிர்ப்பவர்கள் மனுதர்மத்தை ஆதரிப்பது ஏன்?

சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருக்கிறது. 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது கோலாரில் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி அனைத்து திருடர்களும் மோடி என்ற ஒரு குடும்பப் பெயர் வைத்துள்ளனர் என்று போகிற போக்கில் ஒரு கருத்தைக் கூறினார்.

இதை எதிர்த்து பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் வழக்குத் தொடர்ந்தார். அந்த விசாரணை முடிந்த நிலையில் அவரை குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறை தண்டனையையும் விதித்துள்ளது. ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் அவமதித்து விட்டார் என்று இந்த தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

மனுதர்மம் இன்றைக்கும் பார்ப்பனரல்லாத மக்களை சூத்திரர் என்று கூறுகிறது. சூத்திரர்கள் என்று சொன்னால் பார்ப்பனர்களுக்கு வைப்பாட்டி மக்கள், விலைக்கு வாங்கப்பட்டவர்கள், அடிமை சேவகம் செய்பவர்கள் என்றெல்லாம் மனுதர்மம் எழுதி வைத்திருக்கிறது. அது தடை செய்யப்படவில்லை. ஒட்டு மொத்த பார்ப்பனரல்லாத மக்களும் பெண்களும் சூத்திரர் என்ற இழிவுக்கு இப்போதும் உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள்.

அதற்குப் பாதுகாப்பு அரணாக ஆகமம் என்ற ஒன்றை தூக்கிக்கொண்டு சூத்திரராக இருப்பவர்கள் கோயில் கர்ப்ப கிரகத்துக்குள் நுழைந்தாலே சாமி தீட்டு ஆகிவிடும் என்று கூறுகிறார்கள். இதை நீதிமன்றங்களும் தீர்ப்புகளாக உறுதிப்படுத்தி வருகிறது. இவ்வளவு அவமானங்கள் ஒரு பெரும்பான்மை சமூகத்தின் மீது பார்ப்பனியத்தால் சுமத்தப்படுவதைப் பற்றி இங்கே எவருக்கும் எந்த கவலையும் இல்லை. எந்த எதிர்ப்பும் நாட்டில் வருவதும் இல்லை.

இலண்டனில் ராகுல் காந்தி பேசியபோது, இந்திய ஜனநாயகத்தை விமர்சித்து விட்டதாக மக்களவையில் ஆளுங்கட்சியினரே பிரச்சினையைக் கிளப்பி நாடாளுமன்றத்தை முடக்கிக் கொண்டு வருகிறார்கள். ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார்கள். நான் விளக்கம் தர வேண்டும்; அதற்குப் பேச அனுமதி வேண்டும் என்று சொன்னால் உனக்கு பேசுவதற்கு அனுமதி கிடையாது என்கிறார்கள். இப்போது நாடாளுமன்றத்துக்குள் வரவிடாமலேயே பதவியை பறித்து விட்டார்கள். காஷ்மீரில் பாதயாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்தி பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள் என்று பேசிய பேச்சை பெரிய பிரச்சினையாக்கி அவரது வீட்டிற்கு போலீசை அனுப்பி விசாரணை நடத்துகிறார்கள்.

இந்த பழிவாங்கும் அரசியலை எதிர்த்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நான் ராகுல் காந்தி பக்கம் நிற்கிறேன் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும். பழிவாங்கும் பார்ப்பன அரசியல் பாசிசத்தை வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வீழ்த்துவதை தவிர இந்த நாட்டிற்கு வேறு விடுதலையே இல்லை.

பெரியார் முழக்கம் 30032023 இதழ்

 

You may also like...