புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் (ஏப்ரல் 29)

“நாடு நமக்கென்று வாங்குவீர்!”

மத – ஓடத்திலேறிய மாந்தரே – பலி

பீடத்திலே சாய்ந்தீரே!

பாடு பட்டீர்கள் பருக்கையில்லா தொரு

பட்டியில் மாடென வாழ்கின்றீர் – மதக்

கேடர்கள் காலினில் வீழ்கின்றீர் – ஒண்ட

வீடு மில்லாமலே தாழ்கின்றீர்!   (மத)

பாதிக்குதே பசி என்றுரைத்தால், செய்த

பாபத்தைக் காரணம் காட்டுவார் – மத

வாதத்தை உம்மிடம் நீட்டுவார் – பதில்

ஓதி நின்றால் படை கூட்டுவார்.              (மத)

வாதனை சொல்லி வணங்கி நின்றால் தெய்வ

சோதனை என்றவர் சொல்லுவார் – பணச்

சாதனையால் உம்மை வெல்லுவார் – கெட்ட

போதனையால் தினம் கொல்லுவார். (மத)

பேதிக்கும் நோய்க்கும் பெரும் பசிக்கும் பல

பீதிக்கும் வாய் திறப்பீர்களோ! – இழி

சாதியென்றால் எதிர்ப்பீர்களோ? – செல்வர்

வீதியைத் தான் மதிப்பீர்களோ?               (மத)

கூடித் தவிர்க்கும் குழந்தை மனைவியர்

கூழை நினைத்திடும் போதிலே – கோயில்

வேடிக்கை யாம் தெரு மீதிலே – செல்வர்

வாடிக்கை ஏற்பீரோ காதிலே!     (மத)

தொட்டிடும் வேலை தொடங்கலு மின்றியே

தொந்தி சுமக்கும் புரோகிதர் – இட்ட

சட்டப்படிக்கு நீரோ பதர் – அவர்

அட்டகாசத்தினுக் கேதெதிர்?     (மத)

மூடத்தனத்தை முடுக்கும் மதத்தை நிர்

மூலப் படுத்தக்கை ஓங்குவீர் – பலி

பீடத்தை விட்டினி நீங்குவீர் – செல்வ

நாடு நமக்கென்று வாங்குவீர்.    (மத)

பெரியார் முழக்கம் 24042014 இதழ்

You may also like...